Cinema Home
 
சினி தகவல்கள்
 

  சினிமா முதல் பக்கம்
 
      ஸ்பெஷல் ரிப்போர்ட்  


ஷம்முவை மாத்தி யோசிக்க வைத்த மாத்தி‌யோசி கதை
நடிகர்கள் கமல்ஹாசன், பிரகாஷ் ராஜின் கண்டுபிடிப்பு ஷம்மு. ராஜஸ்தானில் பிறந்து, அமெரிக்காவில் வளர்ந்த தமிழ்ப் பெண். தசாவதாரம் படத்தில் சிறுவேடத்தில் நடித்த இவர், பிரகாஷ்ராஜ் தயாரிக்கும் மயிலு படத்தில் ஹீரோயினாக வளர்ந்தார். மலையன், காஞ்சிவரம் படங்களைத் தொடர்ந்து தற்போது, மாத்தியோசி'யில் பிசியாக இருக்கிறார். இவரது சினிமா ஆர்வம் குறித்து பேசியபோது...

"சினிமா ஆசை எனக்கு எப்போது வந்தது என்றே தெரியாது. மூன்று வயதாக இருக்கும்போதே, "டிவி'யில் மாதுரி தீட்ஷித்தைப் பார்த்தால் பரவசமாகி விடுவேன். மாதுரி மாதிரி நானும் "டிவி'யில் வரவேண்டும் என அம்மாவிடம் அடம் பிடித்து இருக்கிறேன். நடிகை ஆசை எனக்குள் வளர்ந்துகொண்டே இருந்தது. அந்த நேரத்தில்தான் "தசாவதாரம்' படக்குழுவினர் அமெரிக்காவுக்கு வந்திருந்தனர். டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் எனக்கு அதில் ஒரு வேடத்தை கொடுத்தார். அதைத்தொடர்ந்து மயிலு ஒப்பந்தமானேன். காஞ்சிவரம் படத்தில் தனது மகள் கேரக்டருக்கு என்னை பிரகாஷ்ராஜ் சிபாரிசு செய்தார்.

"தமிழ் சினிமாவின் சாதனையாளர்களாக உள்ள நபர்களிடம் பணிபுரிந்ததால், நிறைய கற்றுக் கொண்டேன். டைரக்டர் நந்தா பெரியசாமி இயக்கும் "மாத்தியோசி' படத்தில் நடித்து வருகிறேன். அமெரிக்காவில் வளர்ந்திருந்தாலும் நான் நடித்த படங்களில் எல்லாம் எனக்கு கிராமத்துப் பெண் வேடம்தான் கிடைத்தது. இதுகூட எனக்கு ஒருவித சவாலாகவே இருந்தது. அதன்பின் வந்த வாய்ப்புகள் எல்லாம் என்னை கிராமத்துப் பெண்ணாகவே பார்த்தன. கிராமத்து பாத்திரத்தை சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கைக்கான அழைப்பாகவே அதை நினைத்துக்கொள்கிறேன். ஒரே விதமான பாத்திரத்தில் நடிப்பதில் விருப்பமில்லை. இனி கிராமத்துப் பெண் வேடத்தில் நடிக்கக்
கூடாது என முடிவுசெய்தேன். அந்த நேரத்தில்தான், டைரக்டர் நந்தா பெரியசாமி என்னைச் சந்தித்தார்.

அவர் சொன்ன "மாத்தியோசி' கதையைக் கேட்டதும், முடிவை மாத்தியோசி என எனக்குள் அலாரம் அடித்தது. காரணம், இதிலும் கிட்டத்தட்ட எனக்கு கிராமத்துப் பெண் வேடம்தான். இந்தப் படத்தில், ஹீரோவுக்கு சமமான பாத்திரம் எனக்கு இருந்தது. பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம், நாடோடிகள்' போன்ற படங்கள் வரிசையில் இந்தப் படம் இடம்பெறும். மதுரையின் சுற்று வட்டார கிராம மக்களின் ஆதார வாழ்க்கையையும், வெளியுலகுக்குத் தெரியாத பல முகங்களையும் இந்தப் படம் சொல்லும்.
படத்தின் முதல்பகுதி பகலிலும், இரண்டாம் பகுதி இரவிலும் நடப்பது போல திரைக்கதை வித்தியாசமாக இருக்கும். குருகல்யாண் இசையில், பாடல்கள் மிகச் சிறப்பாக வந்துள்ளன. ஒரு பாடலை, டைரக்டர் மிஷ்கின் பாடியுள்ளார்.

"மதுரையின் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள வட்டார மொழியைப் படிக்கவும், அப்பகுதி மக்களின் நடை, உடை, பாவனைகளை தத்ரூபமாக திரையில் கொண்டு வந்துள்ளார் டைரக்டர் நந்தா பெரியசாமி. இதற்கான பயிற்சிக்காக ஹீரோக்கள் நால்வரும், அரைக்கால் டவுசரோடு அங்கு முகாமிட்டனர். சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், அவர்களை போலீசில் பிடித்துக் கொடுத்த சம்பவங்களும் நடந்தன. படத்தில் இவர்கள், ஆறு காட்சிகளில் மட்டும்தான் பேண்ட் சர்ட் போட்டு வருவர். எனக்கோ, மொத்தம் மூன்றே மூன்று காஸ்ட்யூம்கள்தான். ரிஸ்கான காட்சிகளில் நடிக்கும் "டூப்' நடிகர், நடிகைகளுக்காக வாங்கப்பட்ட ஆடைகள் கூட, புத்தம் புதிதாக அப்படி இருக்கின்றன. அதற்குக் காரணம், டைரக்டர் எங்கள் மீது வைத்த அதீத நம்பிக்கைதான். படத்தின் சேசிங் காட்சிகளில், வெறுங்காலில் நாங்கள் 5 ஆயிரம் மீட்டராவது ஓடியிருப்போம்'' என்றார்.

          << ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்                                                                 சினிமா முதல் பக்கம்
   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.