இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, இசைக்கலைஞனாய் உருவெடுத்து, உலகையே தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர்.
இன்றும், தொலைதுாரம் பயணிப்போருக்கும். இரவுகளில் உறக்கம் வராமல் தவிப்போருக்கும், தோழனாய் தோள் கொடுப்பது இளையராஜாவின் இசையே. ஒரு தமிழனாய், ஒரு இந்தியனாய், நமது இசையை உலகம் முழுக்க உச்சரிக்க செய்தவர்.
ஹிந்தி பாடல்களை நோக்கி சென்ற தமிழர்களை, தன் இசையால் மீட்டெடுத்தவர் இளையராஜா. தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில், ராமசாமி - சின்னத்தாயம்மாள் தம்பதிக்கு மகனாக 1943 ஜூன் 2ல் பிறந்தார். இயர்பெயர் டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன்.
கம்யூனிஸ்ட் கட்சி பிராசார பாடகராக இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் உருவாகியிருந்தார். ஆர்மோனியத்தை தலையில் சுமந்தபடி அண்ணன் போன பாதையில் தொடர்ந்தவர் இளையராஜா.
பாட்டு கேட்க வாங்கியிருந்த ரேடியோவை விற்றுவிட்டு, சகோதரர்களுடன் (பாஸ்கர், கங்கை அமரன்) சென்னைக்கு ரயில் ஏறினார் இளையராஜா.
எம்.எஸ்.வி., நண்பரும், பிறகு உதவி இசையமைப்பாளராகவும் இருந்த ஜிகே வெங்கடேஷிடம் இளையராஜாவிற்கு அறிமுகம் கிடைத்தது. அவரது இசைக்குழுவில் சேர்ந்த பின் அவரது ஏழ்மை நிலையும் மாற ஆரம்பித்தது.
இளையராஜா, 33வது வயதில் தான் முதல்பட வாய்ப்பான அன்னக்கிளியை பெற்றார். 1976-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் படங்களிலேயே 100 நாட்கள் ஓடியதோடு வெள்ளி விழா கண்ட ஒரே படம் அன்னக்கிளி. அன்னக்கிளியில் ஆரம்பமான இளையராஜாவின் இசை பயணம், ஆயிரம் படங்களை கடந்து இன்றும் தொடர்கிறது.
1980-களில் இளையராஜா மட்டுமே ஒரு ஆண்டுக்கு 40 படங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்தார். அவருக்கு முந்தைய இசையமைப்பாளர்கள், 30 ஆண்டுகளில் நெருங்கிய எண்ணிக்கையை 10 ஆண்டிலேயே சாதித்து காட்டினார்.
இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த, 1993ல், லண்டன் ராயல் பில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில், சிம்பொனிக்கு இசையமைத்து, ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமை பெற்றார்.
இந்திய அரசின் உயரிய விருதான பத்மவிபூண் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, மத்திய பிரதேச அரசின், லதா மங்கேஷ்கர் விருது, கேரள மாநில அரசின் விருதுகளை பெற்றவர். இசையில் சாதனை புரிந்ததற்காக, 1994ல், அண்ணாமலை பல்கலையிலும், 1996ல், மதுரை காமராஜர் பல்கலையிலும் முனைவர் பட்டம் பெற்றவர். சாகர சங்கமம் - தெலுங்கு, சிந்து பைரவி - தமிழ், ருத்ர வீணை - தெலுங்கு, பழஸிராஜா - மலையாளம், தாரை தப்பட்டை - தமிழ் ஆகிய திரைப்படங்களுக்கு இசை அமைத்ததற்காக, ஐந்து முறை தேசிய விருதுகளை பெற்று உள்ளார்.
மவுனமும் ஒரு வித மொழிதான், அந்த மவுனத்தைக் கூட தன்னுடைய இசையில் வார்த்தைகளால் புரிய வைக்க முடியாத உணர்வுகளைக் கூடப் புரிய வைத்தவர் இளையராஜா என்றால் மிகையல்ல.
அவரின் பிறந்தநாளான இன்று வாசகர்களாகிய நீங்களும் வாழ்த்தலாம்....!
மேலும் இளையராஜா பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்...: http://cinema.dinamalar.com/padmavibhushan_ilayaraja/