வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
குஜராத்தை சேர்ந்த நமீதா தெலுங்கு படத்தில் அறிமுகமாகி அங்கு ஒரு சில படங்களில் நடித்து விட்டு எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். இரண்டாவது படமான ஏய் படத்தில் சரத்குமாருடன் படு கவர்ச்சியாக நடித்தன் மூலம் கவர்ச்சி நடிகை ஆனார். அதன் பிறகு கவர்ச்சியை தன் அடையாளமாக வைத்துக் கொண்டார்.
ரசிகர்களை மச்சான் என்று அழைத்து அவர்களையும் அரவணைத்துக் கொண்டார். சாணக்யா, பம்பர கண்ணாலே, ஆணை, பச்சக்குதிர, நான் அவனில்லை என பல படங்களில் கவர்ச்சியாகவே நடித்தார். ஒரு கட்டத்தில் உடல் பருமன் அதிகரித்து விடவே வாய்ப்புகள் குறைந்தது. இதனால் கடை திறப்பு விழாக்களுக்கு சென்றார்.
நமீதா கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் யாருடனும் அதிகம் கிசுகிசுக்கப்படவில்லை. அவருடன் குஜராத்தை சேர்ந்த அவரது நெருங்கி உறவினர் ஒருவர் தங்கியிருந்தார். படப்பிடிப்புகளுக்கும் அவர் துணையாக வந்து கொண்டிருந்தார். அவர் நமீதாவின் உறவினர் என்பதோடு நமீதாவுடன் படித்தவர் என்றும் கூறப்பட்டது. அவரைத்தான் நமீதா திருமணம் செய்ய இருக்கிறார் என்று கூறப்பட்டது. இதனை நமீதா ஒப்புக் கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
இந்த நிலையில் மியா என்ற படத்தில் தன்னுடன் நடித்து வரும் வீரேந்திர சவுத்ரி என்ற புதுமுக நடிகரை மணக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். 30 வயதை கடந்த நமீதா தன்னை விட வயது குறைந்தவரை மணக்க இருக்கிறார். மியா படம் பற்றி அதிக தகவல்கள் இல்லை. ஆனால் அதில் நடித்த வீரேந்திர சவுத்ரி, நமீதா மீது அதிக அக்கறை காட்டியிருக்கிறார். அந்த அக்கறையே காதலாக மாறியிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 6ந் தேதி வீரா நமீதாவிடம் தன் காதலை தெரிவித்திருக்கிறார். அதற்கு நமீதாவும் ஓகே சொல்லியிருக்கிறார். வீராவுடன் காதல் வந்தது எப்படி என்பது குறித்து நமீதா கூறியதாவது:
வீரா என்னுடைய சிறந்த நண்பர், என் மனதுக்கு இனியவர். அவர் தயாரிப்பாளர் என்பதுடன் ஆர்வமிக்க நடிகர். இந்தத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட காதல் திருமணம். எங்கள் சிறந்த நண்பர் சஷிதர் பாபு மூலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நல்ல நண்பர்களானோம்.
செப்டம்பர் 6, 2017-ல் கடற்கரையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவு விருந்து அளிக்கும் போது காதலை வெளிப்படுத்தினார். நான் மெய்சிலிர்த்துப் போனேன். ஏனென்றால் நான் இதை எதிர்பார்க்கவேயில்லை. ஆனால், இருவரும் ஒரே வாழ்க்கை லட்சியத்தைப் பகிர்ந்து கொள்கிறோம், இருவரும் ஆன்மிக விழிப்பு பெற்றவர்கள் என்பதால் நான் அவரது இந்த விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்தேன். பயணம், மலையேறுதல், இயற்கையை ரசித்தல் என்று இருவருமே அன்பைப் பகிர்ந்து கொண்டோம்.
இருவருமே விலங்குகளை நேசிப்பவர்கள், இருவருக்குமே வாழ்க்கை மீது பெரிய நேசமும் பற்றுதலும் இருக்கிறது. என்னை ஒருவர் அவரது வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தது குறித்து நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக என்னை உணர்ந்தேன். இருவருக்குமிடையே ஒளிவு மறைவு கிடையாது.
கடந்த 3 மாதங்களாக நான் அவரை நிரம்பவும் புரிந்து கொண்ட பிறகு அவருடன் சேர்ந்து வாழ்வதை இன்னும் கூடுதல் அதிர்ஷ்டமாக உணர்ந்தேன். அவரது மென்மையான அக்கறை மற்றும் ஆதரவினால் ஆண்கள் மீதான என் நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது. எனக்கு ஆதரவளித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றிகள், உங்கள் நேசத்தையும் ஆசீர்வாதத்தையும் இருவருமே நாடுகிறோம். நன்றி, கடவுள் உங்களைக் காப்பார்.
இவ்வாறு நமீதா தெரிவித்திருக்கிறார்.
நமீதா, வீரா திருமணம் வருகிற 24ந் தேதி எளிமையான முறையில் திருப்பதியில் நடக்கிறது. இதில் இரு குடும்பத்தாரின் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள். சொந்த ஊரான சூரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.