ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர், பி.வாசுவின் மகன் சக்தி வாசு, வளர்ந்து வரும் இளம் நடிகர். அவர் நடித்துள்ள ஏழு நாட்கள் படம் பற்றியும், தன் திரையுலக அனுபவங்கள் பற்றியும், நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
ஏழு நாட்கள் படம் பற்றி சொல்லுங்க ?
புதுமுக இயக்குனர் கவுதம் இயக்கி உள்ள படம். நிச்சயதார்த்தம் துவங்கி, கல்யாணம் நடக்கவுள்ள, ஏழு நாட்களில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. இந்த இடைப்பட்ட நாளில், ஒரு கொலை நடக்கும். கொலை செய்தது யார் என, ஒரு போலீஸ் அதிகாரி கண்டு பிடிக்கிறார். இதில், நான் ஒரு ரேடியோ அறிவிப்பாளராக நடிக்கிறேன். இந்த கொலை விவகாரத்துக்குள் நான் எப்படி சிக்கினேன்; அதில் இருந்து எப்படி வெளி வருகிறேன் என்ற விஷயங்கள் எல்லாம், சஸ்பென்ஸ்.
சிவலிங்கா படத்தில் உங்கள் நடிப்புக்கு கொஞ்சம் பாராட்டு வந்ததே?
கொஞ்சம் இல்லை; நிறையவே வந்திருக்கு. ரஹீம் என்ற பிரியாணி பாய் கேரக்டரில் நடித்திருந்தேன். ரொம்ப பொருத்தமாக இருந்ததாக, அனைவரும் பாராட்டினர்.
ஹீரோவாக அறிமுகமானாலும், இடையில் சில படங்கள் சொதப்பி விட்டனவே?
சரியான கதை அமையவில்லை என்பது தான் உண்மை. எனக்கு திரையுலகம் குறித்து அறிந்து கொள்வதற்கு, கொஞ்ச காலம் பிடித்தது. அந்த தோல்விகளில் இருந்து, பாடம் கற்றுக் கொண்டேன். இந்த தோல்விக்கு மற்றவர்கள் மீது பழிபோட விரும்பவில்லை; நான் தான் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
உங்கள் தந்தை, மிகப் பெரிய இயக்குனர். இது உங்களுக்கு, சாதகமா; பாதகமா?
நான் சினிமாவில் நுழைவதற்கு, அப்பாவின் பெயர், ஒரு விசிட்டிங் கார்டாக அமைந்தது உண்மை தான். ஆனால், தொடர்ந்து வெற்றி பெறுவதும், அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்வதும், என் கையில் தான் இருக்கு. அப்பா, பிரபல இயக்குனர் என்பதால், என்னிடம் அதிகமாகவே எதிர்பார்க்கின்றனர்; இது, எனக்கு மைனஸ் தான்.
நீங்கள், சாந்தனு, பிரித்வி போன்றவர்கள், சினிமாவில் தாக்குப்பிடிக்க கடுமையாக போராட வேண்டியிருக்கிறதே?
அதற்கு காரணம், நாங்கள், படைப்பாளிகளின் வாரிசுகள் என்பது தான். படைப்பாளிகளின் வாரிசுகளுக்கும், படத் தயாரிப்பாளர்களின் வாரிசுகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. எங்களின் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஒரு பிரம்மாண்ட வெற்றி தேவை; அதற்காகவே கடுமையாக முயற்சித்து வருகிறோம்.
எதிர்காலத்தில் இயக்குனராகும் வாய்ப்பு உள்ளதா?
கண்டிப்பாக இருக்கு. ஆனால், அதற்கு முன், ஒரு வெற்றிகரமான நடிகனாக, என்னை முன்னிறுத்த வேண்டும். இயக்கம் என்பது, சாதாரண விஷயமில்லை. நான், எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, எங்க அப்பாவுக்கு, நிறையவே இருக்கு; கண்டிப்பாக ஜெயிப்பேன்.
உங்க ரோல் மாடல் ?
கமல் சாரின் தீவிர ரசிகன் நான். என் அப்பா, 65 படங்கள் இயக்கியுள்ளார். ஆனால், கமல் சாரை வைத்து, ஒரு படம் கூட இயக்கவில்லை என்ற வருத்தம் இருக்கு. அப்பாவும், கமல் சாரும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இருந்தாலும், இருவருமே பிசியாக இருந்ததால், அது நடக்கவில்லை. அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன்.
சினிமாவில் இழந்ததும், கிடைத்ததும்?
நான், சினிமாவுக்குள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான போது, பல வெற்றிகளை பார்த்திருக்கிறேன்; ஆனால், அதே அளவுக்கு, கடந்த நான்கு ஆண்டுகளில், தோல்விகளையும் சந்தித்திருக்கிறேன்; ஆனாலும், சினிமாவை விட்டு போக முடியவில்லை. வெற்றிக்காக தொடர்ந்து உழைப்பேன்.