தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
2002ம் ஆண்டு மே 10ம் தேதி தனுஷ் நாயகனாக அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' படம் வெளிவந்தது. அந்தப் படம் எடுத்து முடிக்கப்பட்டு பல மாதங்களாக பெட்டியில் முடங்கிக் கிடந்தது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான அந்தப் படத்தின் டிரைலர் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட அந்தப் படம் எதிர்பாராத வெற்றியைத் தந்தது. தனுஷ் என்ற புதிய நாயகன் திரையுலகத்திற்குக் கிடைத்தார். பலரும் இவரெல்லாம் ஒரு நாயகனா என தனுஷைப் பற்றி விமர்சித்தார்கள். அனைத்து விமர்சனங்களையும் மீறி இன்று இந்திய அளவில் ஒரு சிறந்த கலைஞராக தனுஷ் வளர்ந்து நிற்கிறார்.
'துள்ளுவதோ இளமை' படத்திற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'காதல் கொண்டேன்' படமும் பெரிய வெற்றியைப் பெற்றது. மூன்றாவதாக வெளிவந்த 'திருடா திருடி' இன்னும் பெரிய வெற்றியைப் பெற்று, அவரை நம் வீட்டுப் பையன்களில் ஒருவராக பார்க்க வைத்தது. அடுத்து சில தோல்விகளைக் கடந்து மீண்டும் 'தேவதையைக் கண்டேன்' படம் மூலம் எழுந்து நின்றார். 'புதுப்பேட்டை' படம் தனுஷை வேறு ஒரு கட்டத்திற்குக் கொண்டு சென்றது. 'திருவிளையாடல் ஆரம்பம்' மீண்டும் ஒரு கமர்ஷியல் வெற்றியைக் கொடுத்தது.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த 'பொல்லாதவன்' தனுஷின் அந்தஸ்தை உயர்த்தியது. தொடர்ந்து 'யாரடி நீ மோகினி, படிக்காதவன், குட்டி, உத்தமபுத்திரன்' படங்கள் தனுஷின் நடிப்பைப் பற்றிப் பேச வைத்தன.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த 'ஆடுகளம்' படம் தனுஷுக்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது. அது அவரை 'ராஞ்சனா' ஹிந்திப் படத்தில் நாயகனாக நடித்து அங்கும் வெற்றிக் கொடியை நாட்ட வைத்தது. அதன் பின் வெளிவந்த சில படங்கள் தோல்வியடைந்தாலும், 'வேலையில்லா பட்டதாரி' படம் தனுஷின் மார்க்கெட்டை மேலே பறக்க வைத்தது. 'அனேகன், மாரி' படங்கள் அதைக் காப்பாற்றியது. 'தங்கமகன், தொடரி' படங்களில் அவர் தடுக்கினாலும் 'ப பாண்டி' படம் மூலம் இயக்குனராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
இடையில் 'காக்கா முட்டை, விசாரணை' போன்ற சிறந்த படங்களையும், 'எதிர் நீச்சல்' உள்ளிட்ட கமர்ஷியல் படங்களையும் கொடுத்து தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றார். சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல புதியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு திரையுலகில் வெற்றிப் பாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என தனக்குள் இருக்கும் திறமைகளை அடுத்தடுத்து வெளிப்படுத்தி தற்போது ஹாலிவுட் வரை சென்று நடிக்க இருக்கிறார். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே திரும்பி முதலீடு செய்பவர்கள் இங்கு குறைவு. ஆனால், அதை தனுஷ் தொடர்ந்து செய்து வருகிறார். அடுத்து ரஜினிகாந்த் படத்தையும் தயாரிக்க உள்ளார்.
ஒரு இயக்குனரின் வாரிசாக திரையுலகில் அறிமுகமானாலும் சொந்தத் திறமை இல்லை என்றால் இங்கு யாராலும் முன்னேற முடியாது. தன்னுடைய திறமைகளை அடுத்தடுத்து வளர்த்துக் கொண்டு, அடுத்தவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து, தானும் முன்னேறி, மற்றவர்களையும் முன்னேற வைக்கும் இன்றைய இளம் திறமைசாலிகளில் தனுஷ் முக்கியமானவர்.
இன்றுடன் அவர் திரையுலகத்திற்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிறது. மேலும் பல சாதனைகளைப் படைக்க அவரை வாழ்த்துவோம்...