பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்த் திரையுலகத்தில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விக்ரம் பிரபு. நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரன், நடிகர் பிரபுவின் மகன். மூன்றாவது தலைமுறையில் தமிழ் சினிமாவில் நடிக்க வந்துள்ள ஒருவர். 'கும்கி' படத்தின் மூலம்தான் விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமானார். அந்தப் படத்திற்காக விக்ரம் பிரபுவே நடிக்க வாய்ப்பு கேட்டு அப்படத்தின் இயக்குனர் பிரபு சாலமனை அணுகினார் என்றும், அவர் நடிக்க வந்ததே அவருடைய சொந்த முயற்சியில்தான் என்றும் 'கும்கி' பட விழாவிலிருந்து நேற்று நடைபெற்ற 'சத்ரியன்' பட விழா வரை பலரும் பேசிக் கொண்டும், சொல்லிக் கொண்டும் இருந்தார்கள்.
ஆனால், நேற்று நடைபெற்ற 'சத்ரியன்' பட விழாவில் பேசிய இயக்குனர் அமீர், விக்ரம் பிரபு எப்படி நடிக்க வந்தார் என்ற ரகசியத்தை வெளிப்படையாகப் போட்டு உடைத்துவிட்டார். நான் 'கண்ணபிரான்' என்ற படத்தை இயக்குவதற்காக ஒன்றரை கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகையும் பெற்றுக் கொண்டு அந்தப் படத்தின் விவாதத்தில் இருந்த நேரம். விக்ரம் பிரபுவின் அப்பா, நடிகர் பிரபு அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு, “அமீர், பையனைத் தயார் பண்ணியாச்சி” என்றார். அப்போதுதான் எனக்கு பிரபு அவர்களுக்கு அவ்வளவு பெரிய பையன் இருக்கிறார் என்பது தெரிய வந்தது.
நான் 'கண்ணபிரான்' படத்தின் வேலையில் இருந்ததால் விக்ரம் பிரபுவை அறிமுகப்படுத்த முடியாத நிலையில் இருந்தேன். அதை அவரிடமும் சொன்னேன். இருந்தாலும் அவர் விக்ரம் பிரபுவின் புகைப்படத்தை எனக்கு அனுப்பியிருந்தார்.
அந்த சமயத்தில் நான் இயக்குனர் சங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம். 'கும்கி' பட இயக்குனர் பிரபு சாலமன் என்னிடம் யானையை கட்டி மேய்க்க ஒரு பலம் வாய்ந்த நாயகன் தேவைப்படுகிறார் என்றார். எனக்கு உடனே ஞாபகம் வந்து விக்ரம் பிரபுவின் புகைப்படத்தை அவரிடம் கொடுத்து, நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் பலம் வாய்ந்த நடிகருக்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்றேன். அதன் பின் அவர் விக்ரம் பிரபுவை அழைத்துப் பேசி 'கும்கி' படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்தினார். இந்த சம்பவங்கள் அனைத்தும் விக்ரம் பிரபுவுக்குத் தெரியுமோ, தெரியாதோ, என் மூலம்தான் அவர் பிரபு சாலமனிடம் அறிமுகமானார்,” என விக்ரம் பிரபு நடிக்க வந்த உண்மைச் சம்பவத்தை விவரமாக விளக்கினார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த விக்ரம் பிரபுவுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான், இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இனி, விக்ரம்பிரபு அவருடைய சொந்த முயற்சியில் தான் நடிக்க வந்தார் என்று யாருமே பேச முடியாது.