தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சென்னை, : 'ரஜினி நடித்த, கபாலி படத்துக்கு, தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக அளித்த புகார் மனு மீது, அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையை சேர்ந்த தேவராஜன் தாக்கல் செய்த மனு:சென்னை, பெரம்பூரில் உள்ள ஸ்ரீபிருந்தா தியேட்டரில், கபாலி படத்துக்கு, இரண்டு டிக்கெட் வாங்கினேன்; ஒரு டிக்கெட்டுக்கு, 300 ரூபாய்
கட்டணம் பெற்றனர்.
ஆறு மடங்குஅரசு நிர்ணயித்த கட்டணப்படி, அந்த தியேட்டரில், ஒரு டிக்கெட்டுக்கு, 50 ரூபாய் தான் பெற வேண்டும். ஆனால், ஆறு மடங்கு கட்டணத்தை, தியேட்டர் நிர்வாகம் வசூலித்தது.
கபாலி படம் வெற்றிகரமாக ஓடியதால், தியேட்டர் உரிமையாளர்கள், நான்கு, ஐந்து மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலித்தனர். தியேட்டர் உரிமையாளர்களின் சட்டவிரோத செயல்களால், பொது மக்களின் பணம், 250 கோடி ரூபாய் அளவுக்கு, கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், 'ஆன்லைன்' மூலம் புகார் அனுப்பினேன். என் மனுவை பரிசீலித்து, அதிக டிக்கெட் கட்டணம் வசூலித்த, தியேட்டர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:
சிறிய தியேட்டர்கள் மட்டுமே, அதிகாரிகளின் கண்களுக்கு தெரிகிறது. பெரிய தியேட்டர்கள் மீது, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் என்றால், விதிகள் மீறப்படுகின்றன. அதிகாலை, 3:00 மணிக்கு, படம் திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது; இதற்கு யார் அனுமதி வழங்கியது?
என்ன நடவடிக்கை?
தங்களுக்கு இலவசமாக டிக்கெட் கிடைப்பதால், விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் உள்ளனரா? விதிமீறல்களால், அரசுக்கு தான் வரி இழப்பு ஏற்படுகிறது. மனுதாரர் அளித்த மனு மீது, அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
இவ்வாறு நீதிபதி கூறினார்.மனுதாரர் அனுப்பிய மனு மீதான நடவடிக்கை குறித்த விபரங்கள் அடங்கிய பதில் மனு தாக்கல் செய்வதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, விசாரணையை, அக்., 21க்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.
நடிகர் ரஜினிக்கு நோட்டீஸ்
நடிகர் ரஜினிகாந்த் நடித்த, கபாலி திரைப்படம், சில மாதங்களுக்கு முன், திருச்சி ரம்பா தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதற்காக, ராட்சத விளம்பர பலுான், தியேட்டர் அருகே பறக்க விடப்பட்டது. மூன்று நாட்கள் கழித்து, பலுானை அவிழ்த்த போது, அது எதிர்பாராத விதமாக வெடித்தது. இதில், நால்வர் காயமடைந்தனர்; அனைவரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை, வாடகைக்கு பலுான் அமைத்தவரே ஏற்க வேண்டும் என, போலீசார் மற்றும் தியேட்டர் நிர்வாகத்தினர் வற்புறுத்தியுள்ளனர்.
இதையடுத்து வாடகைக்கு பலுான் அமைத்தவர், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் ரஜினிகாந்த், ரம்பா தியேட்டர் உரிமையாளர், மேலாளர் மற்றும் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் கர்ணன் ஆகியோருக்கு, நஷ்டஈடு கேட்டு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.