சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் |
தேசிய விருது பெற்ற நடிகர், தம்பி ராமைய்யா. இயக்குனர், பாடகர் என, இவருக்கு பல முகங்கள் உண்டு. காமெடி நடிகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவரை, மைனா, கும்கி போன்ற படங்கள், குணச்சித்திர நடிகராக அடையாளம் காட்டின. நாளை வெளியாகவுள்ள அப்பா படமும், தன் திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என, நம்பிக்கையுடன் இருக்கிறார்.
நமக்கு, அவர் அளித்த பேட்டி:
அப்பா படத்தில் உங்க ரோல்?
இந்த படத்தை இயக்கி நடித்துள்ளார் சமுத்திரக்கனி. அவரும், ஒரு அப்பா ரோலில் நடித்துள்ளார். நானும், அப்பாவாக நடித்துள்ளேன். பிள்ளைகள் விருப்பத்துக்கேற்ப வளர்ப்பது, சமுத்திரக்கனியின் ரோல். 'என் விருப்பப்படி தான் பிள்ளைகள் வளர வேண்டும்' என்ற கண்டிப்பான அப்பா ரோலில் நான் நடித்திருக்கிறேன்.
எத்தனை ஆண்டு போராட்டத்துக்கு பின், சினிமாவில் உங்களுக்கு வெற்றி கிடைத்தது?
பலமுறை, பல இடங்களில் தோற்றுப் போயிருக்கிறேன். அத்தனை தோல்விக்கும் நானே காரணம். 18 ஆண்டுகள் வாழ்க்கையுடன் போராடினாலும், சோர்ந்து விடவில்லை. ஒரு வேலை இல்லை என்றால், மற்ற வேலைக்கு ஓடிக்கொண்டே இருந்தேன்.
இயக்குவது, நடிப்பது, எதில் உங்களுக்கு அதிக ஆர்வம்?
இசையமைப்பதற்கும், பாடல் எழுதுவதற்கும் தான், சென்னைக்கு ஓடி வந்தேன். ஒருசில சந்தர்ப்ப சூழ்நிலை, என் கையை பிடித்து, வேறு இடத்துக்கு கொண்டு வந்து விட்டது. நேரத்தை வீணடிப்பதே இல்லை. எந்த வேலையாக இருந்தாலும், அதை ஏற்று, திறம்பட செய்வதே, என் நோக்கம்.
தற்போதைய சினிமா 'டிரெண்ட்' உங்களுக்கு வசதியாக இருக்கிறதா?
சினிமா, காலத்துக்கு ஏற்ப, மாறிக்கொண்டே தான் இருக்கிறது. ஒரு தொழிலுக்கு வந்து விட்டால், அதை விட்டு விலகி போவது ரொம்ப சிரமம். அப்படி செய்தால், திண்டிவனத்தில் பணத்தை தொலைத்து விட்டு, திருப்பதியில் தேடுவது போலாகி விடும். மக்கள் ரசிக்கும் படங்கள் வரத்தான் செய்கின்றன. தமிழ் திரையுலகின் எல்லை, இப்போது, ரொம்பவும் விரிவடைந்து விட்டது.
சினிமாவில் மட்டும் தான் நடிப்பீர்களா; இல்லை வாழ்க்கையிலும்...
திரையில் ரொம்ப அற்புதமாக நடிப்பேன். ஆனால், வாழ்க்கையில் சுத்தமாக நடிக்க வராது. ஒரு பொய் சொல்ல ஆசைப்பட்டால், அடுத்த நிமிடமே உண்மையை சொல்லி மாட்டிக்குவேன்.
சங்கீதம் முறைப்படி கற்ற அனுபவம் உண்டா?
நான், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவன். எல்லா கருவியையும் வாசிப்பேன். கிராமத்தில், நான் பறை அடிக்க ஆரம்பித்தால், செத்த பிணம் கூட, எழுந்து, இசை கேட்டு, திரும்ப செத்துப் போகும். அந்த அளவுக்கு வாசிப்பேன்.
சினிமாவுக்கு வயசு ஒரு முக்கிய காரணமா?
சினிமாவுக்கு திறமை தான் முக்கியம். அதை வெளிப்படுத்தும் திறமையும் இருக்க வேண்டும். திறமை இருக்கு என குப்புற படுத்து கிடந்தால், துாக்கி எறியப்படுவோம். தினசரி, நம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்; தேடல் இருக்க வேண்டும்.
புதியவர்களுடன் வேலை பார்க்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?
அவர்கள் புதிதாக சிந்திக்கின்றனர். நம்மை விட, வயதில் சின்ன பையன் சொல்கிறானே என, ஈகோ பார்க்க மாட்டேன். 'தம்பி, திரும்ப சொல்லுங்க; எனக்கு புரியலை' என்பேன். உடன் வேலை பார்ப்பவர்களுடன் ஒரு புரிதலுடன் இருக்க வேண்டும்.
உங்களுக்கு உள்ள சில நல்ல பழக்கங்கள்?
உலகத்திலே தம்பி ராமைய்யாவுக்கு பிடிச்சவன், தம்பி ராமைய்யா தான். என்னை, எனக்கு ரொம்ப பிடிக்கும். மனைவி எனக்கு கொடுத்த முத்தங்களை விட, எனக்கு நானே, கண்ணாடியில் கொடுத்த முத்தங்கள் தான் அதிகம். கேளிக்கை, கலந்துரையாடல் என, எதற்கும் போக மாட்டேன். படப்பிடிப்பு முடிந்தால் வீடு; அவ்வளவு தான் என் வாழ்க்கை.
அரசியலுக்கு அழைப்பு வந்தது உண்டா?