டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் மரணம் இந்தியாவையே உலுக்கிப்போட்ட துயர நிகழ்வு.
காந்தி, நேரு, அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரது மரணத்துக்குப் பிறகு மக்களை துடிதுடிக்க வைத்த, துவள வைத்த இழப்பு கலாமின் இறப்புதான்.
அப்துல் கலாமுக்கு முன் எத்தனையோ பேர் குடியரசுத்தலைவர்களாக இருந்திருக்கிறார்கள்.
அவர்களில் பலர், கடந்த காலங்களில் இயற்கை எய்தியும் இருக்கிறார்கள்.
அவர்களின் மரணம் ஏற்படுத்தாத பாதிப்பை, துக்கத்தை அப்துல்கலாமின் மரணம் ஏற்படுத்தி உள்ளது.
மெத்தப் படித்தவர்களை மட்டுமின்றி சுத்தமாகப் படிக்காத பாமர மக்களையும் கலாமின் மரணம், கண்ணீர்க்கடலில் மூழ்கடித்தது.
திருத்துறைப்பூண்டி என்ற ஊரில் ராமய்யன் என்றொரு செருப்புத் தைக்கும் தொழிலாளி...! அவரது ஒரு நாள் வருமானம் சுமார் 150 ரூபாய்.
கலாம், காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன அந்த ஏழைத்தொழிலாளி அவரது சக்திக்கு மீறி சுமார் 300 ரூபாய் செலவு செய்து அப்துல் கலாமின் உருவப்படத்தை வாங்கி வந்து, தான் தொழில் செய்யும் இடத்தில் வைத்து, அந்தப் படத்துக்கு மாலைபோட்டு மெழுகுவர்த்தி ஏற்றி தன் அஞ்சலியை செலுத்துகிறார்.
அது மட்டுமல்ல, அப்துல்கலாம் இறந்தது முதல் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட தினம் வரை... மூன்று நாட்கள் அப்துல் கலாம் உருவப்படத்தின் முன்பு அமர்ந்து மானசீகமாக தன் இரங்கலைத் தெரிவித்த ராமய்யன், அன்றைய தினங்களில் செருப்புத் தைக்கும் தன் தொழிலையையும் செய்யவில்லை. அதாவது தன் மூன்று நாள் வருவாயைப் பற்றிக் கவலைப்படாமல் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமுக்கு தன் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக செலுத்தினார் அவர்.
இத்தனைக்கும் அப்துல் கலாமுக்கும் அவருக்கும் யாதொரு தொடர்புமும் இல்லை.
ஊடகங்கள் வாயிலாக அவரைப் பற்றி கேள்விப்பட்ட விஷயங்கள்தான் அப்துல் கலாம் மீது அவருக்கு மிகப்பெரிய பற்றுதலையும், மரியாதையையும் ஏற்படுத்தின.
அதனாலேயே கலாமின் மரணத்தை அந்த ஏழைத்தொழிலாளியினால் எளிதில் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
ராமய்யன் என்பது ஒரு உதாரணம்தான்...!
அப்துல் கலாமின் மறைவு செய்தி கேட்டு துடித்துப்போனவர்கள் இந்திய மக்கள் தொகையைவிட அதிகமான பேர்.
ஆம்.. இந்தியர்களை மட்டுமல்ல, உலக மக்களையும் உலுக்கி எடுத்தது அப்துல் கலாமின் அகால மரணம்.
அப்துல்கலாமின் உடல், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோதும், ராமேஸ்வரத்துக்குக் கொண்டு வந்தபோதும் லட்சக்கணக்கான மக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டு வந்தனர்.
தெருவுக்குத் தெரு அப்துல் கலாமின் உருவப்படங்கள்! கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டு அவரது படத்துக்கு அஞ்சலியும், ஆராதனையும் செய்த காட்சிகளையும் காணாதவர்களே இருக்க முடியாது.
எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பிறகு இப்படியொரு காட்சியை இப்போதுதான் தமிழக மக்கள் பார்த்தனர்.
அப்துல் கலாம் என்பவர் முன்னாள் குடியரசுத்தலைவராக மட்டுமல்ல, ஒரு விஞ்ஞானியாக மட்டுமல்ல, எதிர்கால இந்தியாவுக்கான வழிகாட்டியாகவே மக்களின் மனதில் வாழ்ந்திருக்கிறார் என்பதை உணர்த்திய உண்மை சாட்சிகள் அவை.
பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக அவரைப் பற்றிய செய்திகள் மட்டுமே..!
அத்தனை தொலைக்காட்சிகளிலும் அப்துல்கலாமின் பேச்சு அடங்கிய காட்சிகளும், அவரது மூச்சு அடங்கிய செய்தியும்தான் இடம்பெற்றிருந்தன.
அப்பேற்பட்ட மக்களின் கதாநாயகனான அப்துல் காலமின் மரணத்தை... நிழல்களின் தேசத்தில் உள்ள கதாநாயகன்கள் கண்டுகொள்ளவே இல்லை என்பது வேதனை மட்டுமல்ல, வெட்கக்கேடும் கூட.
சினிமா நடிகர்களும்.. நடிகைகளும்... வேற்று கிரகத்திலிருந்து வந்திறங்கியவர்களா? அவர்களும் சராசரி மனிதர்கள்தான்.
புகழின் உச்சியில் இருப்பதாலோ என்னவோ...அதுவே நிரந்தரம் என்கிற நினைப்பில் வாழ்கிற அவர்கள் தங்களைச்சுற்றி வட்டம்போட்டுக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
அதன் காரணமாக தங்களை வாழவைக்கும் மக்களைப் பற்றி, மக்களின் பிரச்சனைகள் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. சமூகப் பிரச்சனைகளிலும் சங்கமிப்பதில்லை.
அதுபோலவே கலாமின் மரணத்தையும் சினிமா நட்சத்திரங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை எண்ணுகிறபோது சினமே ஏற்படுகிறது.
நமக்கு சம்பந்தமில்லாத யாரோ ஒருவருடைய இறப்பாகவே எண்ணிவிட்டனர். அதனால்தான் அவர்களிடமிருந்து ஒரு அனுதாபச்செய்தியோ.. இரங்கல் செய்தியோ கூட வரவில்லை என்று தோன்றுகிறது.
தான் நடிக்கும் திரைப்படங்கள் பற்றி, தன் சொந்த வாழ்க்கை தகவல் பற்றி ஊடகங்களுக்கு செய்திகளை அனுப்பி அதன்மூலம் பப்ளிசிட்டியை தேடிக்கொள்ளும் சினிமா நட்சத்திரங்கள் அப்துல் கலாம் மரணம் பற்றி மறந்தும் மூச் விடவில்லை.
விதிவிலக்காக, அப்துல் கலாம் இறந்த செய்தி வெளியானதும் கவிஞர் வைரமுத்து, நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற வெகுசிலர் மட்டுமே இரங்கல் செய்தியை வெளியிட்டனர். திரைப்பட அமைப்புகள் சம்பிரதாயமாக அனுதாப செய்தியை அனுப்பியதோடு, வேலைநிறுத்தம் காரணமாக ஏற்கனவே நடைபெறாமல் இருந்த படப்பிடிப்புகளை ரத்து செய்வதாக அறிவித்ததோடு சரி. அரைநாள் தியேட்டர்கள் மூடப்பட்டன. முன்னாள் குடியரசுத்தலைவருக்கு திரைப்படத்துறையினரின் அதிகபட்ச அஞ்சலி இவ்வளவே!
கமல் தவிர்த்து முன்னணி நட்சத்திரங்கள் எவரும் அப்துல் கலாம் மரணத்துக்கு ஆர்.ஐ.பி. என்று மூன்றெழுத்தைக் கூட சொல்லவில்லை. இரண்டு நாட்கள் கழித்து தன்னுடைய (?) ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் நாலு வரிச்செய்தியை வெளியிட்டார்.
விஜய்யோ மேலும் ஒருநாள் கழித்து ரஜினியைப்போலவே வரிவிளம்பரம்போல் நாலு வரியில் இரங்கல் செய்தி அனுப்பினார்.
ரஜினி, விஜய்யைவிட மற்ற ஹீரோக்கள் இன்னும் மோசம். குறிப்பாக.. அஜித்! தமிழக இளைஞர்களுக்கு எல்லாம் தலயாக இருந்தும், தமிழ்மகனான கலாமின் மரணத்துக்கு அஜித்திடமிருந்து ஒரு அனுதாபச் செய்தி கூட வரவில்லை.
தலயே இப்படி இருக்கும்போது, கோடம்பாக்கத்தில் உள்ள தளபதிகள் பற்றி சொல்ல வேண்டுமா? நாயைக் கொல்லக் கூடாது என்று நடு ரோட்டில் கோஷம் போட்ட விஷால் தொடங்கி, சூர்யா, கார்த்தி, விக்ரம், தனுஷ், சிம்பு, ஆர்யா, விஜய்சேதுபதி என எந்த கதாநாயக நடிகனும் கலாமின் மரணத்தைக் கண்டுகொள்ளவே இல்லை.
இவர்களில் தனுஷ் ஒரு படி மேலேபோய் அப்துல் கலாம் இறந்த செய்தி வெளியான சில மணி நேரத்தில் தன் பிறந்தநாளைக் கோலாகலமாகப் கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டத்தில் தண்ணிப்பார்ட்டியும் தவறாமல் இடம்பெற்றிருந்தது. என்ன கொடுமை பாருங்கள்?
ராமேஸ்வரத்துக்கு அப்துல் கலாமின் உடல் கொண்டு வரப்பட்டபோது லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்களில் ஒருவராக கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த சினிமாத்துறையிலிருந்து சென்றது சிலர் மட்டுமே. அவர்களில் சிவகார்த்திகேயன் முக்கியமானவர். அடுத்து விவேக், வடிவேலு போன்றவர்களும் கலந்து கொண்டனர்.
ரஜினி, கமல் உட்பட மற்ற எந்த கதாநாயகன்களுக்கும் ராமேஸ்வரத்துக்கு வழி தெரியவில்லை.
அப்துல் கலாம் போன்ற சாதனை மனிதர்களை எண்ணுகிறபோது, இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்ற பெருமித உணர்வு நம்மை ஆட்கொள்கிறது.
அவருடைய அருமை தெரியாத திரைப்பட நட்சத்திரங்களை நினைக்கும்போது, இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்கிறோமே என்ற வெட்கமும், வேதனையும்தான் ஏற்படுகின்றன.