மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
தமிழ் சினிமாவில், 'சாக்லேட் பாய்' முத்திரை குத்தப்பட்டு, 'இவர், அதற்கு ஒத்து வர மாட்டார்' என, நல்ல படங்களில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர், சித்தார்த். ஆனால், 'ஜிகர்தண்டா, காவியத்தலைவன்' என, இப்போது, மாறுபட்ட வேடங்களில் நடித்து, தன்னை ஒதுக்கி வைத்தவர்களுக்கு, நடிப்பின் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார். சினிமா பசி பிடித்து அலையும் அந்த இளைஞருடன் பேசியபோது...
* தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடுவது போல் தெரிகிறதே?
இந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்தாலும், இப்போது நான் தமிழ் நடிகன் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக வேறு எந்த மொழிப் படங்களிலும் நடிக்கவில்லை. தமிழில், எனக்கு ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. எனக்கு பிடித்த படங்களில் நடிக்க வேண்டும், வேறு ஒரு களத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. 'சித்தார்த், இந்த மாதிரி தான் படம் நடிப்பான்' என்ற, 'இமேஜை' ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
* சினிமாவில் இதுவரை நீங்கள் கற்றுக் கொண்டது?
வாழ்க்கையில், தினமும் ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டு தான் இருக்கிறேன். 23 படங்களில் நடித்து முடித்தபின் தான், 'காவியத்தலைவனை' பார்த்து விட்டு, நன்றாக நடித்திருப்பதாக, மற்றவர்கள் பாராட்டுகின்றனர். சினிமாவில், ஒரு நல்ல உயரத்தை அடைவதற்காக கடுமையாக, 'ஹோம் ஒர்க்' செய்கிறேன்.
* கதைகளை தேர்வு செய்வதில் கெட்டிக்கார நடிகர் யார்?
உண்மையைத் தான் சொல்கிறேன். இந்தாண்டில், சித்தார்த் போல், வேறு யாரும் கதைகளை தேர்வு செய்யவில்லை. இந்த வாய்ப்பு, திரும்ப அமையுமா என தெரியவில்லை. இதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
* இப்போது, நடிகர்களுக்கு படங்களில் நடிக்க மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறதா...?
எனக்கு அதுபோன்ற பயம் எதுவும் இல்லை. என் திறமை மீது, எனக்கு நம்பிக்கை இருக்கு. பிழைப்பு மீது மரியாதை இருக்கு. வில்லனுக்கு முக்கியத்துவம் உள்ள, 'ஜிகர்தண்டா'வில் ஏன் நடித்தாய் என, பலரும் கேட்கின்றனர். இப்போது, 20 படம் வந்தால், அதில் ஒரு படம் தான் ஓடுகிறது; அந்த ஓடுகிற படத்தில், நான் இருக்க வேண்டும் என, நினைக்கிறேன். இதில் என்ன தவறு உள்ளது. 'ஜிகர்தண்டா'வில் நான், சிம்ஹாவுக்கு உதவினேன். 'காவியத்தலைவனில்' எனக்கு, நாசரும், பிரித்வியும் உதவினர்.
* இயக்குனர்களிடம், உங்கள் கருத்தை வலியுறுத்துவது உண்டா?
இயக்குனர்கள் கூறும் கதைக்குள் ஐக்கியமாகி, அந்த கதையுடனேயே பயணிப்பேனே தவிர, என் கருத்தை திணிக்க மாட்டேன். இதுவரை எந்த இயக்குனரிடமும், என் கருத்தை திணித்தது இல்லை. ஒரு கதைக்குள், நடிகன், ஐக்கியமாகி விட்டால், பாதி வெற்றி கிடைத்து விடும்.
* படித்தவர்கள் அதிகமாக சினிமா துறைக்கு வருவது பற்றி...?
நான் கூட, எம்.பி.ஏ., முடித்து, தங்கப்பதக்கம் வாங்கியபின் தான், இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தேன். அப்போது, பெட்ரோலுக்கு மட்டும் தான், 2,000 ரூபாய் வாங்கினேன். ஆனால், அந்த அனுபவம் தான், இப்போது பல லட்சம் ரூபாய் சம்பாதிக்க உதவியாக உள்ளது. அப்போது நான் எடுத்த முடிவு சொதப்பியிருந்தால், சிரமம்தான். இப்போது, யார் வேண்டுமானாலும், ஒரு குறும்படம் எடுத்து, 'யூடியூப்'பில் போட்டு விடலாம். வாய்ப்பு அதிகமாகவும், எளிதாகவும் கிடைக்கிறது. இதனால் படித்தவர்கள் அதிகமாக வருகின்றனர். இது, ஆரோக்கியமான விஷயம் தான்.
* படம் இயக்கும் ஆசை உள்ளதா?
உதவி இயக்குனராக இருந்தபோது, ஏராளமான கதைகள் தயார் செய்து வைத்தேன். சின்ன வயதில் இருந்தே, கமல்ஹாசனின் ரசிகன் நான். அவர் நடிப்பு ரொம்ப பிடிக்கும். வாய்ப்பு கிடைத்தால், அவரை வைத்து ஒரு படம் இயக்குவேன்.
* சமூக நலனில் உங்கள் பங்கு?
நான், என்னைப் பற்றித் தான் அதிகமாக யோசிப்பேன். மற்றவர்களை மாற்றுவது என் வேலையில்லை. எல்லாரும், வரி செலுத்த வேண்டும் என, நினைக்கிறேன். ஆனால், பாதி பேர் வரி கட்டுவதே இல்லையே. நல்ல குடிமகனாக, சில பணிகளை செய்கிறேன். ஆனால், அதை விளம்பரப்படுத்துவதில் விருப்பம் இல்லை. அது, நாகரிகமான செயல் அல்ல என, நினைக்கிறேன். சினிமாவில், வன்முறை, செக்ஸ் இருந்தால், சுத்தமாக எனக்கு பிடிக்காது. இந்த இரண்டு விஷயமும் கூடியவரை என் படங்களில் இருக்காமல் பார்த்து கொள்கிறேன்.
இவ்வாறு சித்தார்த் கூறினார்.