மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
நான் நடித்த படங்களை பார்க்க தியேட்டருக்குள் வரும் ரசிகர்கள் ஒரு இரண்டறை மணி நேரம் ஜாலியாக பொழுதை கழித்தோம் என்ற சந்தோசத்துடன் தியேட்டரை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்பதுதான் எனது நோக்கமே. அதனால் அதை கருத்தில கொண்டே படங்களை செலக்ட் பண்ணி நடிப்பேன் என்கிறார் மா.கா.பா.ஆனந்த். தினமலர் இணையதளத்திற்காக அவரிடம் சில கேள்விகள்...
* வானவராயன் வல்லவராயன் படத்தில் நடித்ததற்கு எந்த மாதிரியான ரெஸ்பான்ஸ் கிடைத்தது!
அனைவருமே பாராட்டினார்கள். அதில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தேன். அந்த அண்ணன் தம்பி படத்தைப்பார்த்து விட்டு நிறைய ரசிகர்கள் போன் செய்து என் நடிப்பு குறித்து பாராட்டினார்கள். அது எனக்கு பெரிய எனர்ஜியாக இருந்தது. அதனால் அடுத்தடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று படத்துக்குப்படம் வித்தியாசமான பர்பாமென்சை கொடுக்க ஆசைப்படுகிறேன். அதன்காரணமாக, கமர்சியல் கதைகள் என்றாலும் வித்தியாசமான கதைக்களங்கள், எனக்குள் இருக்கும் நடிப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரங்களாக தேடிப்பிடித்து நடித்து வருகிறேன்.
* இப்போது என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?
வானவராயன் வல்லவராயன் படத்துக்குப்பிறகு பஞ்சுமிட்டாய் படத்தில் காமெடி, காதல், செண்டிமென்ட் கலந்த கதையில் நடிக்கிறேன் அப்படத்துக்கு இமான் இசையமைக்கிறார். மேலும், அட்டி என்ற படத்தில் ஸ்லம் ஏரியா கதையில் நடிக்கிறேன். சும்மா சுற்றிக்கொண்டு திரியும் கதை. ஆனால் காமெடி இருக்கும். படம் பார்ப்பவர்களை நூறு சதவிகிதம் திருப்தி படத்தும் கதை. இப்படத்துக்கு சுந்தர்.சி பாபு இசையமைக்கிறார். அதோடு, எனது முதல் படத்தைப்பார்த்து விட்டு குடும்பம் குடும்பமாக படம் பார்த்ததாக சொன்னார்கள்.அந்த படத்தை பார்ப்பதற்கு தங்களது பிள்ளைகளே பெற்றோரை தியேட்டர்களுக்கு அழைத்ததாக சொன்னது மகிழ்ச்சி தந்தது. அதனால் பிள்ளைகளும், பெற்றோர்களும் சேர்ந்து ஒன்றாக படம் பார்த்து ரசிக்கக்கூடிய வகையிலான கதைகளுக்கே முதலிடம் கொடுக்கிறேன்.
* இப்போது எத்தனை ஹீரோ கதைகளில் நடிக்கிறீர்கள்?
நடித்து வரும் பஞ்சுமிட்டாய், அட்டி என்ற இரண்டு படத்திலுமே சிங்கிள் ஹீரோவாகத்தான் நடிக்கிறேன். வானவராயன் வல்லவராயன் முதல் படம் என்பதால் என்னை விட பெரிய நடிகரான கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்து ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. ஆனால் தொடர்ந்து டபுள் ஹீரோவாக நடிக்க நான் விரும்பவில்லை. மேலும், நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது கதைகள்தான். அதனால் கதைக்கேற்ப என்னை முழுசாக மாற்றி நடிப்பேன். இருப்பினும் எனக்கென்று ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது வரை சிங்கிள் ஹீரோவாக நடிப்பதையே தொடருவேன்.
* குடும்பங்களை தியேட்டர்களுக்கு இழுப்பதுதான் உங்கள் டார்க்கெட்டா?
சமீபகாலமாக பேமிலியுடன் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பது குறைந்து விட்டது. இளைஞர்கள்தான் இன்றைக்கு அதிகமாக தியேட்டருக்கு வருகிறார்கள். அதனால் அவர்களையும் மனதில் கொள்கிறேன். இருப்பினும் பேமிலியும் வந்தால் படம் இன்னும் அதிக நாட்கள் ஓடுமல்லவா. அதனால் இளசுகளுக்கு முதலிடம் கொடுத்தாலும் பேமிலியையும் கருத்தில் கொண்டே கதைகள் ஓகே செய்கிறேன். அதனால் முடிந்தவரை இரட்டை அர்த்த ஆபாச வசனங்களோ, முகம் சுழிக்க வைக்கும் ஆபாச காட்சிகளோ நான் நடிக்கிற படங்களில் இல்லாதவாறு பார்த்துக்கொள்வேன்.
* ஆனால், இன்றைக்கு இளைஞர்கள் கிளாமருக்காகவே படம் பார்க்க வருவதாக கூறப்படுகிறதே?
அதெல்லாம் தவறான கருத்து. இப்போது ஓடுகிற படங்களை பட்டியலிட்டால் எல்லாமே கதைக்காகவே ஓடுகின்றன. வெறும் கிளாமரை மட்டுமே மையமாக வைத்து வெளியாகும் எந்த படங்களுமே ஓடவில்லை. அதனால் இளவட்ட ரசிகர்கள்கூட நல்ல தரமான படங்களை பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. அவர்கள் கிளாமர் என்றால்கூட இலைமறை காய்மறையாக பார்த்து ரசிக்கத்தான் விரும்புகிறார்கள். அந்த வகையில் நம்முடைய யூத் ரசிகர்களின் ரசனை நல்ல ஆரோக்யமாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
* சின்னத்திரை நடிகருக்கு சினிமாவில் கிடைத்திருக்கும் அங்கீகாரம் குறித்து?
ரொம்ப பெருமையாக உள்ளது. ஒரு காலத்தில் சின்னத்திரை கலைஞர்களுக்கு சினிமாவில் வரவேற்பு கிடைக்காமல் இருந்தது. ஆனால் இப்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனக்கு முன்பு விஜய் டி.வியில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் இன்றைக்கு பெரிய நடிகராக இருக்கிறார். டிவி மூலம் நிறைய ரசிகர்கள் கிடைத்து விடுவதால் முன்பே எங்களுக்கு பப்ளிசிட்டி கிடைத்து விடுகிறது. ரசிகர்களும் கிடைத்து விடுகிறார்கள். அதனால் நாங்கள் நடித்த படத்தை பார்க்க குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வருகிறார்கள். இதெல்லாம் சின்னத்திரை மூலம் கிடைத்த அங்கீகாரம்தான்.
* சினிமாவில் பெரிய ஹீரோ அந்தஸ்து கிடைக்க பெரிய ஹீரோயின்களுடனும் நடிக்க வேண்டும் என்கிறார்களே?
பெரிய ஹீரோயின்களுடன் நடிக்க வேண்டுமென்றால் நானும் பெரிய ஹீரோவாக இருக்க வேண்டுமே. இப்போதுதான் நான் வளர்ந்து வருகிறேன். அதனால் அந்தமாதிரி ஆசையெல்லாம் இப்போது என்னிடம் எதுவும் இல்லை. நடிப்பில் மட்டுமே எனது முழு கவனமும் உள்ளது. இப்போது நடித்து வரும் பஞ்சுமிட்டாய், அட்டி என்ற இரண்டு படங்களும் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இந்த படங்கள் திரைக்கு வரும்போது எனது நடிப்பின் முதிர்ச்சி தெரியும்.
* சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களெல்லாம் ஹன்சிகா மாதிரி முன்னணி ஹீரோயின்களுடன் நடித்து விட்டார்களே?
முதலில் அவரும் சிறிய ஹீரோயின்களுடன்தான் நடித்தார். ஒரு நாலைந்து படங்களுக்கு பிறகுதான் மான்கராத்தேயில் ஹன்சிகாவுடன் நடித்தார். அதேமாதிரி நானும் சில ஹிட் படங்களை கொடுத்த பிறகு அதற்கான சூழ்நிலைகள் அமையும். சினிமாவைப்பொறுத்தவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஹிட் படங்களில் நடிக்கும்போது அதற்கான சூழல்கள் தானாக அமையும். அதனால் முன்னணி ஹீரோயினிகளுடன் நடிக்க வேண்டும் என்ற முயற்சிகளில நான் ஈடுபடவில்லை. வித்தியாசமான கதை, வித்தியாசமான பர்பாமென்ஸ் இவற்றில் மட்டுமே எனது முழு கவனமும் இப்போது உள்ளது.
* தமிழில் உங்களை அதிகம் கவர்ந்த நடிகை யார்?
ப்ரியாஆனந்த் எனக்கு ரொம்ப பிடித்தமான நடிகை. நான் அவரது தீவிரமான ரசிகன். நார்த் இந்தியன் லுக்கில் இருக்கும் ஒரு தமிழ் பெண் அவர். நடிப்பாலும் சரி, அழகினாலும் சரி என்னை அதிகமாக கவர்ந்த நடிகை என்று சொல்லலாம். ரீமாசென் போன்ற இன்னும் சில நடிகைகளும் பிடிக்கும் என்றாலும் ப்ரியாஆனந்தே முதலிடத்தில் இருக்கிறார்.
* அப்படியென்றால் எதிர்காலத்தில் அவருடன் டூயட் பாட வேண்டும் என்ற கனவு உள்ளதா?
ப்ரியாஆனந்தை ஒரு ரசிகனாகத்தான் இப்போது வரை பார்த்து வருகிறேன். அதனால் இப்போது எனது கனவுக்கன்னியாக இருந்து வரும் அவர் என் கனவு நனவாகும் விதத்தில் என்னுடன் டூயட் பாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எல்லாமே காலத்தின் கையில் உள்ளது. ஆனால் என் கனவுகள் நனவானாலும் சந்தோசம். இல்லையென்றாலும் வருத்தமில்லை. ரசிகனாகவே இருந்து விடுவேன்.
* உங்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு எந்த மாதிரியான அட்வைஸ் சொல்ல நினைக்கிறீர்கள்?
அட்வைசெல்லாம் யாருக்கும் வேண்டாம் சார். வீட்டில் பெற்றோர் சொல்லும அட்வைஸை தாங்க முடியவில்லை என்றுதான் தியேட்டருக்கே வருகிறோம் என்ற சில ரசிகர்கள் சொல்ல நானே கேட்டிருக்கிறேன். அதனால் அப்படிப்பட்டவர்களை தியேட்டருக்கு வரவைத்தும் அட்வைஸ் செய்தால் போதுமடா சாமி என்று ஓட்டம் பிடித்து விடுவார்கள்
அதனால் நான் நடித்த படங்களை பார்க்க தியேட்டருக்குள் வரும் ரசிகர்கள், ஒரு இரண்டறை மணி நேரம் ஜாலியாக பொழுதை கழித்தோம் என்ற சந்தோசத்துடன் தியேட்டரை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்பதுதான் எனது நோக்கமே. அதனால் அதை கருத்தில கொண்டே படங்களை செலக்ட் பண்ணி நடிப்பேன். கருத்து சொல்வதற்கோ, அட்வைஸ் செய்வதற்கோ நான் ஆளில்லை. அந்த அளவுக்கு பெரிய நடிகனும் நானில்லை என்கிறார் மா.கா.பா.ஆனந்த்.